ஒளி தரும் வெளிச்சம் சூரியன் கிட்ட மட்டுமா இருக்கு, இருட்டு இருக்குற இடத்தில எல்லாம் சின்ன வெளிச்சங்கள் வந்துட்டு தான இருக்கு.
மனித குலத்தின் மகத்தான வெற்றிகளெல்லாம் பெரிய பெரிய யுத்த பூமியில் மட்டும் விளையவில்லை...எதிர் கொள்ள முடியாத சூழ்நிலையில், போராடி வென்ற எனக்கு தெரிந்த சில எளிய மனிதர்களை பற்றி எழுதலாம் என்று இந்த தொடரை தொடங்குகிறேன்.
முதலில் பெண்களில் இருந்து தொடங்குகிறேன்
மீனாட்சி
அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை
இவரைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில எழுதி இருக்கேன். இருந்தாலும் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கு.
ஏமாற்றங்கள் எல்லோறது வாழ்விலும் வருவது தான். இந்த ஏமாற்றங்களை எவ்விததில் அனுகுகிறோம் என்பது தான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசபடுது.
காலமும், கட்டியவனும் தன் கனவுகளை சிதைத்தாலும் அதே சிதைவு மற்றவர்களுக்கு நேரக்கூடாது என்று தளராது பணி புரியும் ஒரு பெண்தான் மீனாட்சி. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர். விசுவின் அரட்டை அரங்கம் மூலம் வெளி உலகிற்கு அறிமுகம் ஆனவர். கோவையில் உள்ள ஒரு கிராமத்தில் 9 ஆம் வகுப்பு வரை படித்த சராசரி கிராமத்துப் பெண்.
முதல் இரவு அன்று, திருமணத்திற்கு முன் தான் சில தாகாத உறவுகளை வைத்து இருந்ததாகவும் இனிமேல் அது மாதிரி தவறுகளை செய்யமாட்டேன் என்று கூறிய கணவரை பார்த்து ஆஹா, இத்தனை 'நேர்மையான' மனிதர் தனக்கு கணவனாக கிடைத்து விட்டாரே அன்று பெருமிதம் கொண்டு கடவுளுக்கு நன்றி கூறிய தொலகாப்பியரின் 'ideal house wife'. ஆனால் இந்த நன்றி உணர்ச்சி, கடவுளை எந்த விதத்திலும் சந்தோஷப்படுத்தவில்லை. கணவனின் உடல் நிலை மோசமாகி சில பரிசோதனைகளை மேற்கொண்ட போது அவருக்கு எச்ஐவி தாக்கு இருப்பது, நோய் முற்றிய பின் தான் தெரிந்திருக்கிறது.கணவனின் உடல் நிலை மிகவும் மோசமாகவே, வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். கைக்குழந்தையோடு அவதிபட்டுக் கொண்டிருந்த போது கணவரும் இறந்துவிட்டார். மீனாட்சியையும் எச்ஐவி தாக்கியிருப்பது பின்பு தான் தெரிந்தது. ஆனால் அவர் தளரவில்லை. புரிதலும் பரிவும் உள்ள உறவுகளை விட பலம் சேர்க்கும் விஷயம் ஏதாவது இருக்கிறதா?...ஹ்ம்ம். அருமையான பெற்றோர்கள்,அன்பான சகோதரன், இந்த உறவுகள் இவரை சொந்தக்காலில் நிக்க இயக்கியது.
விசுவின் அரட்டை அரங்கத்தில் பங்கேற்றபின் இவரது முகம் பரவலாக அனைவருக்கும் தெரிந்தது. அந்த மேடையில் தைரியமாக பேசி, எங்களுக்கு மட்டுமா, அனைவருக்குமே முடிவு மரணம் தானே என்று கேட்டு அனைவரையும் வாய் அடைக்க வைத்தார்.
தனக்கு கிடைத்த இந்த அரவனைப்பும் ஆதரவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். மேலும், மருத்துவமனைகளிலும் பொது இடங்களிலும், எச்ஐவி யால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறெல்லாம் உதாசீனப் படுத்தப்படுகிறார்கள் என்பதை பார்த்த இவர், மருத்துவமனையில் பணியாற்ற முடிவு செய்தார். அதற்காக கவுன்சலிங்க துறையில் டிப்ளமா படித்து தேர்ச்சி பெற்றார். கவுன்சலிங் திறமையை வளர்த்துக் கொண்டதோடு, எச்ஐவி கிருமியை பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டார். இன்று கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பெண்கள் மருத்துவத் துறையில், கவுன்சலராக பணியாற்றுகிறார். ஒரு நாளும் இவர் அழுதோ, அல்லது தனக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று வறுத்தப்பட்டதை பார்த்ததில்லை. சமீபத்தில் கோவயில், நானும் மீனாட்சியும் எச்ஐவி பற்றியும், இருவரின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதை போல ஒரு குரும் படம் தயாரிக்க ஒரு தோழி ஆசைபடவே, மருத்துவமனை வளாகத்திலேயே இந்த படம் ஷூட் செய்யப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக எடுக்கப்பட்ட 15 நிமிட படம். அவரின் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருந்த போது, எச் ஐவியால் பாதிக்கப்படாத தன் மகளைப் பற்றி பேசுகையில் உடைந்தே போய்விட்டார். இந்த விஷ்யத்தில் அவரை சமாதானம் செய்ய எங்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இது ஒரு 5 நிமிடம் தான், மீண்டும் சுதாரித்துக் கொண்டு, எங்களுக்கு ஆறுதல் கூறி, தொடர்ந்து படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக 'Positive Mother's Network என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறார். இவரது கரத்தை இருகப் பற்றிக் கொண்டு கரையேரும் பெண்கள் ஏராளம். இவர் ஊக்குவித்து இன்று களப்பணியில் இருக்கும் பெண்கள், தமிழரசி, காயத்ரி, கோமதி, ஆதிலட்சுமி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்கள் அனைவருக்கும் சமூக மாற்றங்கள் பற்றிய உரத்த சிந்தனையும், குறிப்பாக ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இதில் மனதை பிசையும் விஷயம், இவர்கள் அனைவரும் 24 வயதை தாண்டாதவர்கள்.
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் நடத்தும் கேபில் டீவி குழு இவர்களோடது தான்.
சமீபத்தில் மீனாட்சிக்கு Spirit of Assisi National Awardம் வளங்கப்பட்டது. ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனம் இவருக்கு Life time achivement award ம் வழங்கியுள்ளது.
இந்தப் பெண்கள் உருவாக்கியுள்ள இந்த நம்பிக்கை வளையம், உணர்வுகளால் ஆன உறுதி வளையம்.
இவர்களுக்கு உறுதினையாக இருக்கும் டாக்டர். மகாதேவன் அவர்களை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.
.