Sunday, October 19, 2008

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர முடியவில்லை. அப்படி அவர்களின் நிலையில் என்னை வைத்து பார்க்க, நிஜத்தில் அனுபவிக்க ஒரு வாய்ப்பை சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்டேன். வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத தருணங்கள், அனுபவங்கள். இந்த அனுபவம் மூலம் என் பணி சார்ந்த எண்ணங்களை இன்னும் பட்டைத் தீட்டிகொள்ள முடிந்தது.

இன்று வரை இந்நோயை ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமாகத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் சமுதாய, பொருளாதார, உளவியல் கூறுகள் சம்பந்தப் பட்டிருப்பதை உணர மறுக்கிறோம். மருத்துவமனைகளில், சமுதாயத்தில், தொழில் செய்யும் இடங்களில் பல அவமானங்களை பாதிக்கப்பட்டவர்கள் எதிர் கொள்கிறார்கள். இதை பற்றி பேசுவதும், அச்சச்சோ என்று உச்சு கொட்டுவதும் எவ்வளவு சுலபமாக வேலை என்பதை இப்பொழுது உணர்கிறேன். (அதாவது என்னைப் போல இந்தத் துறையில் இருப்பவர்களை மட்டுமே சொல்கிறேன்). இந்த பரிதாபம் காட்டுதல் எந்த வகையில் அவர்களுக்கு இது நாள் வரையில் உபயோகமாக இருந்திருக்கிறது, என்றால், இங்கு எழுதுவதால், சில வலை நண்பர்கள் நேராக சென்று
மீனாட்சி போன்றவர்களுக்கு உதவி இருக்கிறார்கள்.

இது தவிர கொள்கையளவிலும் சில மாற்றங்கள் தேவை. அதை தொடர்ந்து சம்பந்தப் பட்ட பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கண்ணோட்டத்திலும் மாற்றம் வரவேண்டும். அவ்வாறு சில மாற்றங்களை கொண்டு வர சமீபத்திய அனுபவம் எனக்கும் என் உயர் அதிகாரிகளுக்கும் ஒரு வாய்ப்பாக கிடைத்தது. இந்த அனுபவம் என் சொந்த முயற்சியால் கிடைத்த ஒன்று என்று சொல்லிக் கொள்வதில் உண்மையிலே பெருமை அடைகிறேன். ஏனென்றால் எடுத்துக் கொண்ட முயற்சியும் கிடைத்த அனுபவமும் அப்படி.

தில்லியில் உள்ள அரசு மருத்துவனைகளில் இயங்கி வரும் ஒருங்கினைந்த எச்ஐவி சோதனை மற்றும் ஆலோசனை மையங்கள், (Integrated Counselling and Testing Centres) எச்ஐவி ஆலோசனைக்காக வருபவர்களை மிக மோசமாக நடத்துவதாக சில பத்திரிகைகள் செய்திகளாக வெளியிட்டன. அதனால் தில்லியில் உள்ள அனைத்து தன்னார்வ சோதனை மையங்களுக்கும் ஒரே நாளில் எந்த முன்னறிவுப்புமின்றி சென்று பார்த்து வர அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் படி குழுவிற்கு 5 பேர் என 7 குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை மேற்கொள்ளப் பட்டது. நான் இருந்த குழுவிற்கு தென் தில்லி பக்கம் உள்ள 7 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டது.

முதலில் சென்ற மருத்துவமனையில் நாங்கள் இருப்பதுனாலோ என்னமோ எந்த சம்பவமும் நடக்கவில்லை. ஆலோசனைக்காக ஒதுக்கப்பட்ட நேரம் மட்டும் மிகவும் குறைவாக இருந்தது. அதை சரி செய்ய சொல்லி விட்டு அடுத்த மருத்துவமனைக்கு சென்றோம்

அடுத்த மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னால், உண்மையை கண்டுபிடிக்க வேறு என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசித்தோம். நான் ஒரு யோசனை கூறினேன். நம்மில் யாராவது இரண்டு பேர் எச்ஐவி ஆலோசனைக்காக செல்வதைப் போல சென்று பார்க்கலாம் என்றேன் (Mock patient). சொன்னது தான் தாமதம் எல்லாரும் என்னை ஒரு எதிரியை பார்ப்பதைப் போல பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதே சமயம் யாரும் அவ்வாறு செல்ல முன்வரவும் இல்லை. ஏனென்றால் ஆலோசனைக்காக சென்றால் முதலில் காத்திருக்கவேண்டும். காத்திருக்கும் போது வேறு யாராவது நம்மை பார்க்க வாய்பிருக்கிறது. இது அவர்கள் 'ஊராம்'. அதனால் அவர்கள் பெயர் கெட்டு விடுமாம். இது தானா பிரச்சனை, சரி, நான் தானே யோசனை கூறினேன் நானே செல்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமல் காரை விட்டு இறங்கினேன்.

முதலில் ஆலோசனை மையம் எங்கிருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும். இதற்கும் ஒரு மருத்துவமனை விதி இருக்கிறது. எச்ஐவி ஆலோசனைக்காக வருபவர்கள் மற்றவர்களை கேட்க சங்கடப்படுவார்கள். அதனால் மருத்துவமனை நிர்வாகம் தகுந்த வழிகாட்டி பலகைகளை வைத்திருக்க வேண்டும். ஆனால் அங்கே எந்த வழிகாட்டி பலகையும் இல்லாததால் விசாரித்தே செல்ல வேண்டியிருந்தது. ஒரு வழியாக கண்டுபிடித்து ஆலோசனை மையத்தினுள் நுழைந்தேன். நான் சென்ற போது எனக்கு முன்னால் 8 பேர் இருந்தார்கள். ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். இருக்கட்டும் என்று 'பெஞ்சில்' அமர்ந்து கொண்டேன்.

முதல் 10 / 15 நிமிடங்கள் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. நண்பர்களே, அதற்குப் பிறகு காத்திருந்த ஒரு மணி நேரம் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது. மிகப்பெரிய அனுபவம். வெராண்டாவில் சென்றவர்கள் என்னை பார்த்த பார்வை,பொது மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் ஒரு பார்வை திரும்பி பார்க்காமல் போகவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அப்படி சந்தேகப்பட்டு ஆலோசனைக்காக வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர முடிந்தது. பாதிக்கப்பட்டவராக நடித்துக் கொண்டிருக்கும் நமக்கு, டெஸ்ட் ரிசல்ட் பற்றிய கவலையில்லை. ஆனால் அவர்களுக்கு???...ம்ம்ம்ம்ம்.

இதனிடையே காரில் காத்துக் கொண்டிருந்த என் அலுவலக சகாக்கள், சமோசா வாங்கிட்டு வரவா, மிராண்டா வாங்கிட்டு வரவா என்று கைபேசியில் அழைத்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் பதட்டம் தான். இப்பவும் ஒன்றும் கெட்டு விடவில்லை, நாங்கள் வருகிறோம், ஆலோசகரிடம் பேசலாம் என்று மீண்டும் ஆரம்பித்தனர். ஒன்றும் வேண்டாம் நேரம் ஆகும் காத்திருங்கள் என்று கூறிவிட்டு அமர்ந்திருந்தேன்.

அருகில் ஒரு பெண் கலவர முகத்துடன் அமர்ந்திருந்தாள். என்னாலும் முகத்தை சகஜமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. உண்மையிலேயே எனக்கும் அடி வயிற்றில் ஏதோ பிரட்டிக் கொண்டுதானிருந்தது. மெதுவாக அருகில் வந்து 'நீங்களும் டெஸ்ட் செய்யத்தான் வந்தீங்களா". நான் எற்றுக்கொண்டிருக்கும் பாத்திரத்தின் உண்மை நிலையை உணர ஆரம்பித்தேன். "ஆமா, நானும் டெஸ்டுக்காகத் தான் வந்திருக்கேன்' என்றேன். என் உடையையும் என்னையும் மேலும் கீழும் பார்த்தாள். " ஏன்?, எப்படி?" என்றாள்.. அதாவது நான் எதற்காக டெஸ்டு செய்ய விரும்புகிறேன், எப்படி இந்த நோய்க்கு ஆளானேன் என்பதை விசாரித்தாள். எனக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு ஆர்வத்தில் வந்துவிட்டேன். ஆனால் இந்த கேள்வியை எதிர்கொள்ள இயலவில்லை. கொஞ்சம் மெளனமாக இருந்தேன். அந்தப் பெண், தன் கணவர் ஒரு லாரி ஓட்டுனர் என்றும், கணவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்த பின்னர், நேற்று வந்து டெஸ்டுக்காக இரத்தம் கொடுத்துவிட்டு சென்றதாகவும், இன்று ரிசல்ட் கிடைக்கும் என்றும் கூறினாள். அவளின் மனநிலையை உணர முடிந்தது.

என் மெளனத்தை பார்த்து" பரவாயில்லை, சொல்லுங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் என்றாள்'. நான் சொன்னேன், " எப்படி என்று தெரியவில்லை, மருத்துவர் இங்கு அனுப்பினார்" என்றேன். ரொம்ப புத்திசாலி என்று எனக்குள் நினைப்பு. உடனே அந்தப் பெண், " உங்கள் கணவர் அடிக்கடி வெளியூர் செல்பவரா" என்றார். ஆஹா இது என்னடா வம்பு, நாம் மேற்கொள்ளும் நடிப்பில் பாவம் கணவரை ஏன் இழுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்தப் பெண் மேல் தவறில்லை. நியாயமான கேள்வி தான் கேட்டாள். நான் 'இல்லை' என்றேன். காரணத்தை சொல்ல விரும்பாதவள் போல முகத்தை திருப்பிக் கொண்டேன். நடிப்பதற்கே இப்படியென்றால்... ம்ம்ம்
என் முறை வந்ததும் உள்ளே சென்றேன். ஆலோசகரும் அவரின் சகாக்களும் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தனர். என்னைப் பார்த்ததும் அந்த அறையே அமைதியானது. நான் தனியாக பேச விரும்பவதாக கூறினேன்.

அதற்கான வசதி இங்கில்லை, இப்படியே பேசுங்க என்றார். நான் "டெஸ்ட் செய்ய வந்தேன்" என்றேன்.

"உங்களைப் பார்த்தா படித்து ஏதோ நல்ல வேலையில் இருப்பவர் மாதிரி இருக்கு?" என்றார். நான் 'ஆமாம்" என்றேன்.

"சரி ஏன் டெஸ்ட் எடுக்க விரும்பறீங்க" என்றார். 'சந்தேகம் தான்' என்றேன். உண்மையில் காலுக்கடியில் பூமி என்னை விழுங்கவதைப் போல இருந்தது.

"எச்ஐவி பற்றி தெரியுமா" என்றார்.நான் "தெரியாது சொல்லுங்கள்" என்றேன்.-எச்ஐவி பற்றிய அனைத்து தகவல்களையும் அவர் கொடுக்க வேண்டும். அவரோ எச்ஐவி ஏதோ தகாத உறவின் மூலமாக மட்டுமே வருவதைப் போல தகவல்களை அடுக்கிக் கொண்டு போனார். "தகாத உறவு" என்ற வார்த்தையை ஆலோசகர் உபயோகப்படுத்தக் கூடாது. பாதுகாப்பில்லாத உறவல்லாமல் வேறு வழியுலும் ஒருவர் பாதிக்கப்படலாம் என்பதை கூற ஆலோசகர் மறந்துவிட்டார்.

என் பெயர், முகவரி, வயது, திருமண உறவு போன்ற தகவல்களை எழுத முற்பட்டார். நான் அதெல்லாம் பிறகு தருகிறேன், முதலில் டெஸ்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். "வந்தது எச்ஐவி டெஸ்டுக்கு, இதுல என்ன இரகசியம் வேண்டி இருக்கு". இதை சொன்னது ஆலோசகர் அல்லாத வேறொருவர்.

பிறகு இரத்தம் எடுக்கப்பட்டது. அவ்வளவு தான் ஆலோசனை. டெஸ்ட் பாஸிடிவ் என்றால் என்ன, நெகடிவ் என்றால் என்ன என்பதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.எந்த வித ஆதரவான ஆலோசனையும் வழங்கப்படவில்லை.
"அவ்வளவு தானா வேறு ஏதாவது நீங்க சொல்லணுமா" என்று கேட்டேன். "வேற என்ன போய்ட்டு நாளைக்கு வாங்க...உங்க 'லக்' எப்படி இருக்குன்னு பார்க்கலாம்" என்றார். எத்தனை பொறுப்பில்லாத பேச்சு!!!. அருகில் இருந்தவர்.."க்யா ஆப் மதராசி ஹே கயா" என்றார். நான் ' ஆமாம்" என்று சொன்னதும், " தமிழ்நாட் மே எச்ஐவி ஜாதா பட்தா ஜாராஹாஹே" (தமிழ்நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது) . நான் ஒன்றும் பேசவில்லை.

இதற்குள் என் அலுவலக நண்பர்கள் பொறுமை இழந்து அங்கு வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். ஆலோசகர் அசடு வழிந்து " மேடத்தை பார்த்ததும் நினச்சேன், அப்படி இருக்காதுன்னு" என்று அந்தர் பல்டி அடித்தார்.

"எப்படி" இருக்காதுன்னு நினச்சீங்க? படிச்சவங்க படிக்காதவங்கன்னு இந்த நோய்க்கு பேதம் வேற இருக்கா?. ஆலோசகர், "இல்லை மேடம் இருந்தாலும்...பார்த்தா தெரியும் இல்லை?"

"இப்படி ஒரு கண்ணோட்டம் இருக்க கூடாதுங்குறது தானே நாம் முதலில் மனதில் வைத்துக் கொள்ளவேண்டியது. எப்படி இருந்தாலும் நீங்க நடந்துட்ட முறை சரியில்லையே. படித்தவர்களிடமே இப்படி நடந்துட்டா, படிக்காத பாமரர்களிடம் உங்களின் நடத்தை எப்படி இருக்கும்!! "

இல்ல மேடம்...தினமும் 100 பேர் வராங்க...அதுனால சில சமயம் இது மாதிரி ஆயிடுது. இப்படி பல நியாயங்களை சொல்லி தன் தரப்பு வாதங்களை அடுக்கிக் கொண்டே போனார்.

'Unconditional Postive Regard" என்று உளவியலில் சொல்வார்கள். இது தான் எந்த ஒரு ஆலோசகருக்கும் தாரக மந்திரம். அவரிடம் உதவி கேட்டு வருபவர்களின் மேல் நிபந்தனை இல்லாத மரியாதையும் non-judgemental ஆட்டிட்யூடும் தேவை. ஆலோசகர் மட்டுமல்ல மற்ற மருத்துவ ஊழியர்களும் இதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏன், நாமே இதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.


இந்த இடத்தில் நான் மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.
அலோசகர்கள் தரப்பு வாதங்களையும் நாம் ஒரேயடியாக ஒதுக்க முடியாது. முதுகலை பட்டதாரிகளான இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் 6 அல்லது 7 ஆயிரம் ரூபாய். அவர்களின் சமுதாய, குடும்ப பொறுப்புகளையும் அதிகாரிகள் நினைவில் கொள்ளவேண்டும். எச்ஐவி குறித்த எந்த ஒரு திட்டத்தையும் வகுக்க பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அடிப்படை. அதை சரிவர தொகுத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆலோசகர்களிடம் இருக்கிறது. அவர்கள் பணி புரியும் சூழல், அன்றாடம் சந்திக்க வேண்டிய மக்கள், தினமும் பூர்த்தி செய்ய வேண்டிய ரெஜிஸ்டர்கள் (அதுவே ஒரு பெரிய வேலை..அத்தனை ரெஜிஸ்டர்கள் இருக்கிறது), என பல பொறுப்புகள். பொறுப்புகள் அதிகமாகும் போது அதற்கேற்ற சன்மானத்தை எதிர்பார்ப்பது நியாயம் தானே. எது எப்படி இருந்தாலும் அவர்களின் செயலை இங்கு நியாயப்படுத்த முடியாது.

பாதிக்கப்பட்டவளாக நான் நடித்த அந்த 1 மணி நேரம் எனக்குள் ஓடின எண்ணங்களை இங்கு சொல்லி புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் இது போல எதிர்கொள்ள வேண்டிய தருணங்கள் ஏராளம். ஆலோசனைக்காக வருவது முதல் தொடர்ந்து சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஒரு அனுபவம் காத்திருக்கும். வீட்டில், தொழில் புரியும் இடத்தில், பொதுவாழ்வில், நண்பர்கள் மத்தியில் என அவர்கள் பல எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

வேறு எந்த நோய்க்கும் இல்லாத ஒன்றாக, இந்நோய் வாய்ப்பட்டவர்கள் சமுதாய, பொருளாதார, உளவியல் மற்றும் மருத்துவ பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் ஓரளவிற்காவது மாற்றம் வரவேண்டுமென்றால் கொள்கை மாற்றங்களுடன் எண்ணமாற்றங்களும் வரவேண்டும். சகமனிதன் சுதந்திரம் இவர்களுக்கும் வழங்கப்படவேண்டும்.


பாதிக்கப்பட்டவர்களின் சமுதாய வாழ்க்கையில், அவர்களின் ஒழுக்கம் மீதான பொறுப்பில்லா விமர்சனங்கள், கருத்துக்களாக கண்ணோட்டங்களாக இவர்கள் மீது விழுந்து, அவமரியாதையையும், தாழ்மையுணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 'பண்பு ', 'பண்பாடு' போன்ற வார்த்தைகளை பாலியல் தொடர்பான செயல்களுக்கு மட்டுமே உபயோகிக்காமல், சக மனிதனின் பால் காட்டும் மரியாதையிலும் கடைபிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்கே தயங்கும் நாம் அதற்கான நியாயமான காரணங்களை மனதில் நிறுத்தியே அவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளலாம் அல்லவா?. ...ம்ம்ம்..

Friday, October 03, 2008

போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)

என்னை அதிர வைத்த இரு சம்பவங்கள். அதன் விளைவு இந்த பதிவு; முதல் சம்பவம் நடந்து இருபது வருடங்களாகியிருந்தாலும் நேற்று நடந்ததைப் போன்ற தாக்கம். இரண்டாவது சம்பவம் கடந்த வாரம் கேள்விப்பட்டது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தை உருவாவது எத்தனை அற்புதமான தருணம் இல்லையா? (அந்த நிகழ்வினை நினைச்சுப் பார்த்தா அதிசயம் தான், அனுபவித்து உணர வேண்டிய அற்புத உணர்வு). பேறுகாலத்தில் இந்த சமயத்தில் ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் சிலருக்கு சில மருத்துவ காரணங்களினாலும் (estrogen and progesteron குறைவினால்) உளவியல் காரணங்களினாலும் அதுவே மிகப் பெரிய மன அழுத்ததை கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் உண்மை. இந்த மன அழுத்தம் சில பெண்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டி விடும் என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

'போஸ்ட்பார்டம் ஸைக்கோசிஸ்' (Postpartum Psychosis) என்று அழைக்கப்படும் இந்த வகையான மன அழுத்தம் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?. பேறுகாலத்திற்குப் பின் சில பெண்களுக்கு சில பல காரணங்களினால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இது இரண்டு வகைப்படும்.

ஒன்று சாதாரண மன உளைச்சலுடன் ( postpartum depression) கூடிய மன அழுத்தம். மற்றொன்று, இந்த சாதாரண மன உளைச்சல் அதிகமாகி, அதன் விளைவாக ஏற்படும் போஸ்ட்பார்டம் ஸைக்காசிஸ் என்கிற மன நோய். இந்நோய் மகப்பேற்றிற்குப் பின், ஆயிரம் பெண்களில் ஒரு பெண்ணிற்கு ஏற்படுகிறது. இந்த மன நோயால் பாதிக்கப்படும் பெண்களில் ஐந்து சதவீதம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தலாவது சம்பவம் நடந்தது 1989ல். எங்கள் வீட்டு கட்டுமானப் பணியில் சித்தாளாக வேலை பார்த்த பெண், கட்டிட மேஸ்திரியின் ஆசை வார்த்தையில் மயங்கி, கர்பமாகி பின் கருவை கலைத்து விட்டார். இது நடந்த சில நாட்களிலேயே அவருக்கு வேறொருவருடன் திருமணம் நடந்தது. கணவன் இந்தப் பெண்ணை தினக்கூலிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விட, அது வரை அவள் பட்ட கஷ்டம் எல்லாம் ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் சில நாட்களிலேயே கணவருக்கு இவரின் கடந்த கால வாழ்க்கை தெரிய வர, கர்பமாக இருந்தவள் மீது சந்தேகம் வந்து வயிற்றில் வளரும் குழந்தை தனது இல்லை என்று கூறி விட்டு அந்தப் பெண்ணை விட்டு விலகி விட்டார்.

குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், கணவனையும் எந்த விதத்திலும் சமாதானம் செய்ய முடியவில்லை என்ற கவலை எல்லாம் சேர்ந்து அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. குழந்தை பிறந்தவுடன் அவரால் குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழந்தையை கவனிக்காமல் வெறுக்கத் தொடங்கிவிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், உறவுக்காரர்களும் அவமானப் படுத்தும் படியாக பேச ஆரம்பித்தவுடன் மிகுந்த மன அழுத்திற்கு ஆளாகி 'போஸ்ட்பார்டம் சைக்காசிஸ்' என்ற மன நோயால் பாதிக்கப்பட்டார்.

கணவரின் அன்போ பிறந்த வீட்டின் போதுமான ஆதரவோ இல்லை. வீட்டில் உள்ளவர்களோ இவளுக்கு பேய் பிடித்து விட்டது, சூனியம் வைத்து விட்டார்கள் என்று கூறி மாயாஜால வித்தைகள் தான் செய்தார்களே ஒழிய அவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையை கொடுக்கவில்லை. மன நோய் தீவிரமாகி, ஆறு மாதம் கழித்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்ற வாரம் நடந்த மற்றொரு சம்பவம். உறவுக்காரப் பெண் ஒருவர் சொந்த மாமனையே திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்ததும், பெற்றோர்கள் உட்பட பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். முன்னோர்களில் பெரும்பாலானோர் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொண்டதால், பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி தடுத்துப் பார்த்தார்கள், ஆனால் முடியவில்லை.

முதல் குழந்தை ஆரோக்கியமாகவே பிறந்தது. நான்கு மாதத்திற்கு முன்னர் அவருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை அரோக்கியமாக இல்லை. குழந்தையின் உடலில் பல கோளாறுகள். உறவில் திருமணம் செய்து கொண்டது (Inbreeding) குழந்தையின் உடல் நிலைக்கு ஒரு முக்கியமான காரணம் என்று மருத்துவர்கள் கூறியதும் இந்தப் பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

வீட்டில் இருந்தவர்கள் அதே தாயத்தும், மந்திரிப்பதும் என இருந்திருக்கிறார்களே தவிர ஒரு மனநல நிபுனரிடம் ஆலோசனை கேட்கவில்லை. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப் பட வேண்டிய நிலையிலும், நோயின் தீவிரம் தெரியவில்லை. சரியான ஆலோசனை இல்லாமல், மன உளைச்சலை பகிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப ஒரே எண்ணங்களை மனதில் வளர்த்து, சென்ற வாரம் அந்த பெண், குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்ததும் ஆடிப்போய் விட்டேன். தில்லியில் இருந்து ஒரு வருடம் முன்பு தான் கோவைக்கு இடம் மாறினார்.

இந்நோய்க்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் சில காரணங்கள்:
1)முதன்மை காரணம் பேறு காலத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றம்.
2)குழந்தைப் பிறப்பிற்கு பின் பெண்களுக்கு தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படும் மன அழுத்தம்.
3) தான் தாயாக இருக்க தகுதியானவரா என்ற பயம்.
4) குழந்தை பிறந்த பின் ஏற்படும் செலவுகளை நினைத்து பயம்.
5) குழந்தையை பார்த்துக் கொள்வதினால் ஏற்படும் சலிப்பு, உடல் சோர்வு.

இந்த நோயினால் பாதிக்கப் பட்ட பெண்கள் பலர் மேலே கூறிய எண்ணங்களை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகிறது.

கர்ப்பிணி / பிரசவித்த பெண்களின் மன அழுத்தம் என்பது இன்றும் உணரப்படாத ஒன்று. இது பற்றிய விழிப்புணர்வு படித்தவர்களிடையே கூட மிகக் குறைவு தான். கர்பகாலத்தில் சாதாரண மன அழுத்தம் 16%ல் இருந்து 20% பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பிருந்தாலும் அதற்கு தேவையான ஆலோசனை வழங்கப் படுவதில்லை. பெண்களும் தங்களுக்குள் ஏற்படும் மன உளைச்சலை பகிர்ந்து கொள்வதில்லை.

மன நல நிபுணரை ஆலோசனைக்காக அணுகுவது என்பது இன்றும் நம்மிடையே ஒரு வித தயக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது. சமூகத்தின் பார்வை என்கிற போலியான கட்டமைப்புக்காய் தாங்களே தங்களின் மீது தேவையற்ற சுய தடைகளை விதித்துக் கொண்டு அத்தியாவசிய பிரச்சினைகளுக்குத் சரியான தீர்வுகாணாமல், பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் மூட நம்பிக்கைகளை கட்டி அழுது கொண்டு இருக்கிறோம். இந்த கொடுமையை எங்கே போய் சொல்லி அழுவது.....

இதைப்படிக்கும் உங்களில் சிலரேனும் உங்களின் தங்கையோ, தமக்கையோ, தாரமோ இல்லை ஏன் உங்களின் சுற்றத்தில் ஒரு சக பெண்ணுக்கு இத்தகைய ஒரு நிலை வருமாயின் அங்கே தேவைப்படும் விழிப்புணர்வினை உருவாக்கிட உதவுங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோளும், இந்த பதிவின் நோக்கமும்.

டாக்டரம்மாவுக்கு ஒரு வேண்டுகோள் - நான் சொல்லி இருக்கிற தகவல்கள் எந்த காலத்துலயோ பாடத்துல படிச்சது.... ஏதாவது தப்பு இருந்தாலோ, சொல்ல வேண்டிய முக்கியமான விஷயங்கள் விட்டுப் போயிருந்தாலோ நீங்க சொல்லுங்க டாக்டரம்மா... நீங்க இன்னும் தெளிவா சொல்லலாம்..
மேலும் படிக்க...